திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்!!

38

உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீசிய பெண்ணை பிடித்து மணமகனின் வீட்டார் தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ளது சிகிடாவுனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த்(26). இவருக்கு நேற்றுமுன்தினம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமகன் ஊர்வலம் துமாரி கிராமத்தில் நடந்தது.

அப்போது மணமகள் போல ஆடை அணிந்து வந்த ஒரு இளம்பெண், திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து மணமகன் ராகேஷ் பந்த் மீது வீசினார். இதில ராகேஷ் பிந்த் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது அங்கிருந்த மணமகனின் குடும்பத்தினர், அந்த பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரிய வந்தது. ராகேஷ் பிந்தை தான் விரும்பியதாகவும், அவர் வேறு திருமணம் செய்வதை ஏற்க முடியாததால் ஆசிட் வீசியதாகவும் லட்சுமி கூறினார்.


இதையடுத்து அவரை அடித்து, ராகேஷ் பிந்த் குடும்பத்தினர் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து பன்ஸ்டிஹ் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற ராகேஷ் பிந்த், திருமண இடத்திற்கு வந்து மணமகளை திருமணம் செய்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மணமகன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.