பெண்களே உஷார்… ஐடி பெண் ஊழியரிடம் பாய் ப்ரெண்ட் கொடுத்த பார்சல்.. போலீசாரிடம் சிக்கிய இளம்பெண்!!

74

யார் எதைக் கொடுத்தாலும் வாங்கி விடுவீர்களா? என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருந்திருப்பார் சர்மிளா. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சிறுவயதில் படித்ததெல்லாம் தற்போது மீண்டும் நினைவுக்கு வந்திருக்கும்.

அதனால, நம்பினவங்க, பழகினவங்க, தெரிஞ்சவங்க என்று யார் எதை வைத்திருக்க சொன்னாலும் இருமுறை யோசித்து அப்புறம் தவிர்த்திடுங்க. சென்னை சூளைமேடு, சக்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியே வீடு எடுத்து வசித்து வருகிறார் சர்மிளா.

இந்த குடியிருப்பு வளாகத்தில் அடிக்கடி சந்தேகிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் வந்து செல்வதாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் கண்காணித்து வந்தனர்.

பின்பு, திடீரென அடுக்குமாடி குடியிருப்பில் உரிய அனுமதி பெற்று போலீசார் சோதனை செய்ததில், ஒரு அறையில் இருந்து வித்தியாசமான வாசனை வருவதை கண்டறிந்து அந்த அறையில் சோதனை நடத்தினார்கள்.

அதில், அசாம் மாநில நியூஸ் பேப்பர் சுற்றப்பட்டு இருந்த ஒரு பண்டலில் 300 கி.கிராம் முழு இலையுடன் கூடிய முதல் ரக அசாம் கஞ்சா இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர்.


பின்னர், அறையில் இருந்த சர்மிளாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், எம்பிஏ முடித்துள்ள சர்மிளா, புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளதும் தெரிய வந்தது.

இவரது தாயார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, திருத்தணியை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் சுரேஷ் என்பவருடன் நெருக்கமாக பழகிய நிலையில் ஷர்மிளாவின் அறைக்கு சுரேஷ் அடிக்கடி வந்து சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர் சுரேஷ், ஒரு பார்சலை தன்னிடம் தந்து, பத்திரமாக வைத்திருக்கும்படியும், பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறிவிட்டு சென்றதாகவும், அது கஞ்சா என்று தனக்கு தெரியாது என்றும் சர்மிளா தெரிவித்துள்ளார்.

சர்மிளாவை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில், திருத்தணியில் பதுங்கி இருந்த சுரேஷையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.