ஸ்கூட்டர் விலையை விஞ்சிய அபராத தொகை.. 270 முறை அபராதம் கட்டிய இளம்பெண்!!

45

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்து ரசீது கொடுத்தனர்.

அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அதாவது, அந்தப் பெண் இதற்கு முன் செய்த போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்துடன் கூடுதலாகத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் ஓட்டி வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் 270 முறை போக்குவரத்து விதிகளை மீறியதை போக்குவரத்து போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண், பெங்களூரு, பானஸ்வாடி, காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஸ்கூட்டரில் வழக்கமாக பயணம் செய்கிறார்.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணிகளை ஏற்றிச் செல்வது, தவறான திசையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியில் பேசுவது, சிக்னல்களை மதிக்காமல் கடப்பது என பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் பெங்களூரு போக்குவரத்து போலீசாரின் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


இந்நிலையில், விதிமீறல்களுக்காக அந்த பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட அதிகம். இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, இதுபோன்ற அபராதங்களைத் தவிர்க்க, பாதுகாப்பு உணர்வுள்ள வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு பெங்களூரு போக்குவரத்து காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.