எங்கள் சாவுக்கு காரணம்! வீட்டை காலி செய்ய கூறியதால் விபரீத முடிவு எடுத்த குடும்பம்.!!

321

குறிஞ்சி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் மகள் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை குறிஞ்சி நகரில் அதப்படக்கி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர் பாலமுருகன் மலேசியாவில் பணிபுரிந்து வருவதால் தனது மகன் அபிஷேக் (வயது 9) மற்றும் மகள் மங்கையர் திலகம் (வயது 12) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டு உரிமையாளர், முன்னறிவிப்பின்றி வீட்டை காலி செய்ய தொந்தரவு செய்ததால் மனம் உடைந்த காளீஸ்வரி , தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


சம்பவம் அறிந்து வந்த சிவகங்கை நகர் காவல்துறையினர் மூவரது உடலையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இறந்த காளீஸ்வரி வீட்டுச் சுவரில் தனது தற்கொலைக்கு காரணம் என வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் நாகஜோதி, சுந்தரி என மூவரின் பெயரை எழுதிவைத்துள்ளார்.

தற்கொலை குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் வெளிநாடு பணிபுரிந்து வரும் நிலையில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.